எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

அலிசன் கீடாகட்டுரைகள்

சத்தமாய் சிரித்தல்

அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார்.

தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது. 

வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார். 

சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே!

தேவன் கேட்கிறார்

நடிகரும், தற்காப்புக் கலைஞருமான சக், தனது தாயாரின் நூறாவது பிறந்தநாளில், தனது மனமாற்றத்திற்கு அவர் எவ்வளவு உதவியாக இருந்தார் என்பதைப் பகிர்ந்துகொண்டு அவரது தாயைக் கௌரவித்தார். "அம்மா விடாமுயற்சி மற்றும் நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு" என்று அவர் எழுதினார். மகா பஞ்சகாலத்தில், தன் மூன்று ஆண் குழந்தைகளைத் தானே பராமரித்தாள்; இரண்டு வாழ்க்கைத் துணைவர்கள், ஒரு மகன், ஒரு வளர்ப்பு மகன் மற்றும் பேரக்குழந்தைகளின் மரணங்களைச் சகித்தாள்; மற்றும் பல அறுவை சிகிச்சைகளை தாங்கினாள். "சிறிதோ, பெரிதோ [அவள்] என் வாழ்நாள் முழுவதும் எனக்காக ஜெபித்தாள்." என்றவர் மேலும், "திரைத்துறையில் என்னை அர்ப்பணிக்கையிலும், அவள் என் வெற்றி மற்றும் இரட்சிப்புக்காக வீட்டில் ஜெபித்தாள்." என்றும், " நான் எவ்வாறு இருக்கவேண்டுமோ, இருக்க கூடுமோ அவ்வாறே என்னைத் தேவன் மாற்றியதற்காக என் அம்மாவுக்கு நன்றி." என்று முடித்தார்.

சக்கின் தாயின் பிரார்த்தனைகள் அவருக்கு இரட்சிப்பையும், தேவனுக்குப் பயந்த மனைவியையும் கண்டறிய உதவியது. அவள் தன் மகனுக்காக ஊக்கமாக ஜெபித்தாள், தேவன் அவளுடைய ஜெபங்களைக் கேட்டார். எப்பொழுதும் நமது ஜெபங்களுக்கு நாம் விரும்பும் விதத்தில் பதில் கிடைப்பதில்லை, எனவே ஜெபத்தை மந்திரக்கோலாகப் பயன்படுத்த முடியாது. இருப்பினும் யாக்கோபு, "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” (5:16) என்று நமக்கு உறுதியளிக்கிறார். இந்த அம்மாவை போலவே, நோயுற்றவர்களுக்காகவும், பிரச்சனையில் இருப்பவர்களுக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் (வவ. 13-15). அவளைப் போலவே, நாம் ஜெபத்தின் மூலம் தேவனுடன் தொடர்பு கொள்ளும்போது, உற்சாகத்தையும் அமைதியையும், ஆவியானவர் செயல்படுகிறார் என்ற உறுதியையும் கண்டுகொள்கிறோம்.

உங்கள் வாழ்க்கையிலுள்ள யாருக்காவது ஒருவருக்கு இரட்சிப்பு அல்லது குணமடைதல் அல்லது உதவி தேவையா? விசுவாசத்துடன் உங்கள் ஜெபங்களைத் தேவனிடம் கொண்டுசெல்லுங்கள். அவர் கேட்கிறார்.

இயேசுவைக்குறித்து பேசுதல்

ஒரு நேர்காணலில், கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு இசைக்கலைஞர், இயேசுவைப் பற்றிப் பேசுவதை நிறுத்தும்படி அவர் வலியுறுத்தப்பட்ட நேரத்தை நினைவு கூர்ந்தார். ஏன்? அவர் தமது வேலையே இயேசுவைக் குறித்தது என்று சொல்வதை நிறுத்தினால், அவரது இசைக்குழு மிகவும் பிரபலமாகி, ஏழைகளுக்கு உணவளிக்க அதிகப் பணம் திரட்ட முடியும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதைப் பற்றி யோசித்த பிறகு, அவர் முடிவு செய்தார், "என் இசையின் மையப்புள்ளியே கிறிஸ்துவிலுள்ள என் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்வதாகும். எந்த வழியிலும் அமைதியாக இருக்கப் போவதில்லை. இயேசுவின் செய்தியைப் பகிர்ந்துகொள்வதே எனக்குள் எரியும் அழைப்பு" என்று அவர் கூறினார்.

இதைக்காட்டிலும் ஆபத்தான சூழ்நிலையில், அப்போஸ்தலர்கள் இதேபோன்ற அறிவுரையைப் பெற்றனர். சிறையில் அடைக்கப்பட்டு அற்புதமாக ஒரு தூதனால் விடுவிக்கப்பட்டவர்கள்,  கிறிஸ்துவுக்குள்ளான புதிய வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களிடம் தொடர்ந்து சொல்லுமாறு கூறப்பட்டனர் (அப்போஸ்தலர் 5:19-20). அப்போஸ்தலர்கள் தப்பியோடியதையும், அவர்கள் இன்னும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்கள் என்பதையும் மதத் தலைவர்கள் அறிந்தபோது, “நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா” (வ. 28.) என்று கண்டித்தனர்.

அவர்களோ "மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது." (வ. 29) என்று பதிலளித்தனர். இதன் விளைவாக, தலைவர்கள் அப்போஸ்தலர்களை அடித்து, இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டனர் (வ. 40). அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய் தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள். (வ. 41-42). அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றத் தேவன் நமக்கு உதவுவாராக!

மின்னும் காரியங்களை எதிர்கொள்வது

1960களில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி தொடர் ஒன்றின் கதாநாயகனைப் பார்த்து, ஒருவர் தன்னுடைய மகனை அவனுடைய வாழ்க்கையை சுய வழிகளில் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கொடுப்பதாக சொல்லுகிறார். அதற்கு கதாநாயகன், இளைஞர்களை அவர்கள் போக்குக்கு விட்டுவிடக்கூடாது என்று பதிலளிக்கிறான். அவர்கள் தங்கள் கண்களுக்கு முன்பாக மின்னக்கூடிய முதல் காரியத்தையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் அதில் பிரச்சனை இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும் தருவாயில் காலம் கடந்துவிடும். தவறான தேர்ந்தெடுப்புகள் மின்னக்கூடிய பாக்கெட்டுகளில் பார்வையை அதிகம் கவரக்கூடிய வகையில் இருக்கும். அதைத் தெரிந்தெடுப்பவர்களை சரியான பொருட்களின் வெகுகால பயன்பாட்டை சொல்லி புரியவைப்பது கடினம். ஆகையால் சரியான பழக்கவழக்கங்களை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து “சோதனையை மேற்கொள்ள செய்வது” மிகவும் முக்கியமானது என்று அவர் சொல்லி முடிக்கிறார். 

இந்த கதாநாயகனுடைய வார்த்தைகள் நீதிமொழிகளின் ஞானத்திற்கு ஒத்திருக்கிறது: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (22:6). நம்மில் பலர் இந்த வசனத்தை தேவனுடைய வாக்குத்தத்தமாய் கருதலாம். ஆனால் அவைகள் நல்வழிப்படுத்தும் ஆலோசனைகள். நாமெல்லாரும் சுயமாய் தீர்மானம் எடுத்து இயேசுவை பின்பற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனையும் வேதத்தையும் நேசிப்பதின் மூலம் அதற்கான அஸ்திபாரத்தைப் போடமுடியும். நம்முடைய பாதுகாப்பில் இருக்கும் சிறுபிள்ளைகள் நாளை வளரும்போது, இயேசுவை தன்னுடைய வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு, “மாறுபாடுள்ளவனுடைய வழியிலே” (வச. 5) நடவாமல், அவருடைய வழியிலே நடப்பர். 

கண்களுக்கு முன்பாக மின்னக்கூடிய காரியங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் நம்மை விலக்கி, உறுதியான சாட்சியாய் நிறுத்துகிறார். கிறிஸ்துவின் ஆவி நம்முடைய சோதனைகளை மேற்கொள்ளச் செய்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியான ஜீவியமாய் நம்முடைய ஜீவியத்தை மாற்றுகிறது. 

சிறிய கருணை

அமண்டா, ஒரு சுற்றித்திரியும் செவிலியராகப் பணிபுரிகிறார். அவர் பல மருத்துவமனைகளில் சுழற்சி முறையில் வேலை செய்யவேண்டியிருக்கும். அடிக்கடி தன்னுடைய பதினொரு வயது மகள் ரூபியை வேலைக்கு அழைத்து வருவாள். ரூபி விளையாட்டுத் தனமாய் அங்கேயிருக்கும் நோயாளிகளிடம், “உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் கொடுத்தால், நீங்கள் விரும்புவது எதுவாயிருக்கும்” என்று கேட்பது வழக்கம். அவர்களுடைய பதிலை தன்னுடைய நோட்டு புத்தகத்தில் பதிவுசெய்து வைப்பாள். ஆச்சரியம் என்னவென்றால், அவர்களின் விருப்பங்கள் சிக்கன், சாக்லேட், வெண்ணை, பழங்கள் போன்ற சிறிய விஷயங்களாகவே இருந்தன. அவர்களின் தேவையை குறித்துக்கொண்ட ரூபி, அவற்றை வாங்குவதற்கு பணம் சேகரிக்கத் துவங்கினாள். அவர்கள் எதிர்பார்த்த பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்களை கட்டித் தழுவி, இது உங்களுக்கு ஆறுதலாயிருக்கிறதா என்று கேட்பாளாம்.  

ரூபியைப் போல இரக்கத்தையும் கருணையையும் காட்டும்போது, நம் தேவனைப் பிரதிபலிக்கிறோம். அவர் “கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்” (சங்கீதம் 145:8). ஆகையினால்தான் அப்போஸ்தலனாகிய பவுல், தேவஜனமாகிய நம்மை, “பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு,” (கொலோசெயர் 3:12) ஜீவிக்கும்படிக்கு வலியுறுத்துகிறார். தேவன் நமக்கு அதிக இரக்கம் காண்பித்துள்ளபடியினால், அவருடைய இரக்கத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நாம் இயல்பாகவே தூண்டப்படுகிறோம். நாம் அவ்வாறு செய்யும்போது அது நாளடைவில் நம்முடைய சுபாவமாகவே மாறுகிறது. 

மேலும் பவுல், “இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” (கொலோசெயர் 3:14) என்று கூறுகிறார். அனைத்து ஆசீர்வாதங்களும் தேவனிடமிருந்து வந்தவை என்பதை நினைவில் வைத்து, “நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து” (வச. 17), அவரை ஸ்தோத்தரியுங்கள் என்றும் நினைப்பூட்டுகிறார். நாம் மற்றவர்களிடம் இரக்கத்தை செயல்படுத்தும்போது, நம்முடைய ஆவி உயிர்ப்பிக்கப்படுகிறது. 

ஒளிருவதற்கான வாய்ப்புகள்

இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத்தேயு 5:16
பெருந்தொற்று வெகுவாய் பரவிய நாட்களில் டெல்லியில் வசித்த ஷீத்தல் என்ற பெண், உணவில்லாமல் வருமானமில்லாமல் சாலையோரங்களில் ஆதரவற்று கிடந்த மக்கள் மீது பரிவு கொண்டாள். அவர்களின் நிலைமையை அறிந்து 10 பேருக்கு உணவு சமைத்து, அதைக் கொண்டுபோய் கொடுத்தாள். இந்த செய்தி வெகுவாய் பரவியது. சில தன்னார்வு நிறுவனங்கள் அவளுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து, அதின் விளைவாய், “ப்ராஜெக்ட் அன்னபூர்னா” என்ற திட்டம் உருவானது. 10 பேருக்கு உணவளிக்கத் துவங்கிய ஒரு பெண்ணிலிருந்து துவங்கிய இந்த முயற்சி, 50 தன்னார்வ தொண்டர்களுடன் 60,000 தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் பெரிய திட்டமாய் உருவெடுத்தது.
கொரோனா பெருந்தொற்றானது சேவை மனப்பான்மை கொண்ட பல நபர்களை ஒருங்கிணைத்தது. கிறிஸ்துவின் ஒளியை பிரகாசிக்கும் பல வாய்ப்புகள் கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்தது. இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு... உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16) என்று போதிக்கிறார். அன்பு, தயவு, நல்வார்த்தைகள் மற்றும் செய்கைகள் மூலமாக (கலாத்தியர் 5:22-23), கிறிஸ்துவின் ஒளியை நாம் பிரகாசிக்கச் செய்யலாம். இயேசுவின் மூலமாய் நாம் பெற்றுக்கொண்ட ஒளியை அன்றாடம் நம் வாழ்க்கையில் பிரதிபலித்தால்,“பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” (மத்தேயு 5:16) செய்யலாம்.
கிறிஸ்துவின் தேவையுள்ள உலகத்திற்கு அவர் நம்மை உப்பாகவும் ஒளியாகவும் வைத்துள்ளதால், இன்றும் என்றும் அவருடைய ஒளியை நம்மில் பிரகாசிக்க பிரயாசப்படுவோம்.

என் படைப்பு

ஏழு வயது நிரம்பிய தாமஸ் எடிசன் பள்ளியில் சரியாய் படிக்கவில்லை. அவனை “மக்கு” என்று அவனுடைய ஆசிரியர் திட்டியிருக்கிறார். பள்ளி நிர்வாகம் அவனை வீட்டிற்கு அனுப்பியது. அவனுடைய ஆசிரியரிடம் பேசிய அவனுடைய தாயார், அடுத்த நாளிலிருந்து அவனை பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டிலேயே வைத்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். தாயாரின் கனிவுள்ள அன்பினாலும், உற்சாகத்தினாலும், பெரிய விஞ்ஞானியாய் அவரால் பிற்காலத்தில் மாற முடிந்தது. அவர் சொல்லும்போது, “என்னை வனைந்தவர் என்னுடைய அம்மா தான். அவர் உண்மையானவர்; நான் அவர்களுக்காக வாழ விரும்புகிறேன்; அவரை ஒருபோதும் காயப்படுத்தவே கூடாது என்று விரும்புகிறேன்” என்று தன்னுடைய தாயைக் குறித்து பெருமிதம்கொள்ளுகிறார்.

அப்போஸ்தலர் 15 இல், தங்களோடு மாற்கு என்னும் யோவானை ஊழியத்திற்கு கூட்டிக்கொண்டு போவதில் கருத்து வேறுபாடு ஏற்படும் வரை பவுலும் பர்னபாவும் இணைந்து ஊழியம் செய்தனர். அவன் பம்பிலியா நாட்டில் ஊழியத்திலிருந்து விட்டு பிரிந்துபோனதினால், பவுல் அவனை சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை (வச. 36-38). அதின் விளைவாய் பவுலும் பர்னபாவும் பிரிய நேரிட்டது. பவுல் சீலாவோடும், பர்னபா யோவானோடும் சேர்ந்து ஊழியம் செய்தனர். மாற்கு எனப்பட்ட யோவான் மிஷனரியாய் செயல்படுவதற்கு, பர்னபா இரண்டாவது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அவரே பிற்காலத்தில் மாற்கு சுவிசேஷத்தை எழுதினார். சிறைச்சாலையில் பவுலுக்கு ஆதரவாய் இருந்தார் (2 தீமோத்தேயு 4:11).

நம்முடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, நம் வாழ்க்கையில் நம்மை உற்சாகப்படுத்தியவர்களை எண்ணிப்பார்க்கலாம். மற்றவர்களுடைய வாழ்க்கையில் நாமும் அதேபோல செயல்பட தேவன் நம்மை அழைக்கிறார். யாரை நீங்கள் உற்சாகப்படுத்தப்போகிறீர்கள்?

இயேசு யார்?

இயேசு யாரென்று மக்கள் நம்புகிறார்கள்? அவரை ஒரு சிறந்த ஆசிரியர் என்று ஒத்துக்கொள்ளும் சிலர் அவரை ஒரு மனிதர் என்றே நம்புகிறார்கள். எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ், “இந்த மனிதர் ஒரு தேவனுடைய குமாரனாயிருக்கலாம், அல்லது பித்தம்பிடித்தவராகவோ மோசமானவராகவோ இருக்கலாம். அவரை முட்டாள் என்று நீங்கள் நிதானித்து, அவர் மீது எச்சில் துப்பி, அவரை பிசுhசு என்று சொல்லி கொலை செய்யலாம். அல்லது, அவரது பாதத்தில் விழுந்து அவரை தேவனென்று அழைக்கலாம். ஆனால் அவரை ஒரு சிறந்த மனித ஆசிரியர் மட்டும் தான் என்று சொல்லுவது மதியீனமானது” என்று எழுதுகிறார். இயேசு தன்னை தேவனென்று பொய்யாக அறிக்கையிட்டிருந்தால், அவர் ஒரு சிறந்த தீர்க்கதரிசியாய் இருந்திருக்க முடியாது என்னும் கருத்தை வலியுறுத்துவதற்காகவே “மியர் கிறிஸ்டியானிட்டி" என்கிற புத்தகத்தில் இருந்து பிரபலமான இந்த வார்த்தைகள் முன்வைக்கிறது. அது ஒரு கள்ள உபதேசமாயிருந்திருக்கும். 

தம்முடைய சீஷர்கள் கிராமங்களுக்கு இடையே நடந்துகொண்டிருந்தபோது, இயேசு அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார் (மாற்கு 8:27). யோவான் ஸ்னாநகன், எலியா மற்றும் தீர்க்கதரிசிகளில் ஒருவர் (வச. 28) என்று அவர்கள் பல்வேறு பதில்களை முன்வைக்கின்றனர். ஆனால் அவர்கள் என்ன நம்பினார்கள் என்பதை இயேசு அறிய விரும்பினார். “நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று அவர்களைக் கேட்கிறார். பேதுரு சரியாகப் புரிந்து கொண்டார், “நீரே மேசியா” (வச. 29), இரட்சகர்.

ஆனால் இயேசு யாரென்று சொல்கிறோம்? “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30) என்று இயேசு சொன்ன வாக்கியம் பொய்யாயிருக்கமாகில், அவர் ஒரு சிறந்த ஆசிரியராகவோ, தீர்க்கதரிசியாகவோ இருக்க முடியாது. அவரை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிட்ட அவருடைய சீஷர்களும், பிசுhசுகளும் கூட அறிக்கையிட்டன (மத்தேயு 8:29; 16:16; 1

சிலுவையின் செய்தி

முகேஷ், “கடவுள் இல்லை, மதம் இல்லை, எதுவும் இல்லை” என்ற நம்பிக்கையில் வளர்ந்தவர். தன்னுடைய மக்களுக்கு ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தேடி, அமைதியான போராட்டங்களில் மாணவர்களை வழிநடத்த உதவினார். ஆனால் அவர் தலைமை தாங்கிய போராட்டங்கள் அரசாங்கத்தின் குறுக்கீட்டை சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவாய் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகும் அவலம் நேர்ந்தது. அந்த அசம்பாவிதத்தினால் முகேஷின் பெயர் நாட்டின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றது. ஒரு குறுகிய சிறைவாசத்திற்குப் பிறகு, அவர் ஒரு வெளியூர் கிராமத்திற்குத் தப்பிச் சென்றார். அங்கு அவர் ஒரு வயதான விவசாய பெண்மணியை சந்தித்தார். அவர் இவருக்கு கிறிஸ்தவத்தை அறிமுகப்படுத்தினார். கைகளால் எழுதப்பட்ட யோவான் சுவிசேஷத்தின் நகல் மட்டுமே அவரிடம் இருந்தது. ஆனால் அவருக்கு படிக்கத் தெரியாது. அதை முகேஷிடம் கொடுத்து படித்துக் காட்டுமாறு கூறி, அவர் அதை படிக்க படிக்க, அதை முகேஷிக்கு விளக்கிச் சொன்னார். சரியாய் ஒரு வருடம் கழித்து, முகேஷ் இரட்சிக்கப்பட்டார்.

தான் கடந்த வந்த கடினமான பாதைகளிலும் தேவன் அவரை சிலுவையண்டை நடத்துவதற்கு அவரை பெலப்படுத்தியதை அவரால் உணரமுடிந்தது. பவுல் அப்போஸ்தலர் 1 கொரிந்தியரில் “சிலுவையைப்பற்றிய உபதேசம். . . தேவபெலன்” (1:18) என்று சொன்னதை அவர் நேரில் அனுபவிக்க முடிந்தது. முட்டாள்தனம், பலவீனம் என்று பலர் கருதியது முகேஷின் பலமாக மாறியது. நாம் கிறிஸ்துவுக்குள் வருவதற்கு முன்பு, நம்மில் சிலருக்கும் இதே சிந்தை இருந்திருக்கக்கூடும். ஆனால் ஆவியானவரின் மூலம், தேவனின் வல்லமையும் ஞானமும் நம் வாழ்வில் நுழைவதையும், அது கிறிஸ்துவண்டை நம்மை வழிநடத்துவதையும் உணர்ந்தோம். இன்று சிலுவையின் உபதேசத்தை அநேகருக்கு போதிக்கும் போதகராய் முகேஷ் ஊழியம் செய்கிறார்.
கடினமான இருதயங்களைக் கூட மாற்றும் ஆற்றல் இயேசுவுக்கு உண்டு. இன்று அவருடைய வல்லமையான தொடுதல் யாருக்கு தேவை?